×

நீரில் மூழ்கி மாயமான தொழிலாளி உடல் மீட்பு

 

சத்தியமங்கலம், மே 3: புஞ்சை புளியம்பட்டி அடுத்துள்ள புதுப்பாளையத்தை சேர்ந்தவர் பொன்னுசாமி(52). இவர் நல்லூர் அருகே உள்ள தனியார் நூற்பாலையில் வேலை செய்து வந்தார். நேற்று முன்தினம் உடன் பணிபுரியும் தொழிலாளர்களான அதே பகுதியை சேர்ந்த மணிகண்டன், ராஜா, கந்தசாமி, பிரவீன், அசோக் ஆகியோருடன் அக்கரை தத்தப்பள்ளி அருகே உள்ள அணைத்துறை என்ற இடத்தில் பவானி ஆற்றுக்கு சென்று தண்ணீரில் இறங்கி அனைவரும் குளித்துள்ளனர். திடீரென ஆழமான பகுதிக்குச் சென்ற பொன்னுசாமி தண்ணீரில் மூழ்கினார். இதைக்கண்டு அதிர்சியடைந்த உடன் வந்தவர்கள் காப்பாற்ற முயற்சித்தனர்.

நீச்சல் தெரியாததால், பொன்னுசாமி, தண்ணீரில் அடித்து செல்லப்பட்டு நீரில் மூழ்கி மாயமானார். சத்தியமங்கலம் தீயணைப்பு வீரர்கள், மீனவர்கள், இரண்டு குழுக்களாக பிரிந்து, தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை. இரவானதால்,தேடும் பணி கைவிடப்பட்டு நேற்று காலை மீண்டும் துவங்கியது. உறவினர்களும் தேடும் பணியில் ஈடுபட்டனர். இந்நிலையில் நேற்று மதியம் பகுத்தம்பாளையம் குலவிளக்கு அம்மன் கோவில் அருகே பவானி ஆற்றங்கரையில் பொன்னுசாமியின் சடலம் கரை ஒதுங்கியது. சடலத்தை மீட்ட பவானிசாகர் போலீசார் பிரேத பரிசோதனைக்காக சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து விசாரித்து வருகின்றனர்.

The post நீரில் மூழ்கி மாயமான தொழிலாளி உடல் மீட்பு appeared first on Dinakaran.

Tags : Sathyamangalam ,Ponnusamy ,Pudupalayam ,Puliambatti, Punchai ,Nallur ,Dinakaran ,
× RELATED சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில்...